நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 18 மே, 2018

நெஞ்சில் உறைந்த உறை!





 14.09.2008 இல் தருமபுரித் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்துவதற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்குப் பொறியாளர் மு. அறவாழி அவர்கள் நெய்வேலியிலிருந்து வந்திருந்தார். மருத்துவர் கூத்தரசன் அவர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார், பொறியாளர் தகடூர் கோபியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

 பொறியாளர் மு. அறவாழி அவர்கள் நான் பள்ளி மாணவனாக இருந்ததுமுதல் என்னை நன்கு அறிவார். கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் என்னை அழைத்து நெய்வேலியில் திருவள்ளுவர் விழாவில் பேசச் செய்துள்ளார் (1992). தமிழ் உணர்வுமிக்கவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தம் குடும்பத்தினராகப் போற்றும் உயர்ந்த இயல்புடையவர் மு. அறவாழி. எத்தனையோ ஈழத்துத் தமிழ் நண்பர்கள் அவரின் நெய்வேலி இல்லத்தில் சொந்த வீடுபோல் தங்கி, வாழ்ந்தமையை அறிவேன். அவரைப் போலும் உணர்வாளர்கள் கோடியில் ஒருவர்தான் இருப்பர்.

 பொறியாளர் மு. அறவாழி அவர்கள் என் படிப்பு, ஆய்வு, பணிகள் யாவற்றையும் கண்டு உவந்து, தம் மகனாகவே எண்ணி எண்ணி அன்புசொரிந்தவர். என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். சற்றொப்ப முப்பது ஆண்டுகள் அவருடன் பழகியுள்ளேன். என் தமிழ்ப் பணியை ஊக்கும் வகையிலும் போக்குவரவுச் செலவுக்குமாக ஓர் உறையில் ஆயிரம் உருவாவை வைத்து, எனக்கு அன்பளிப்பாக 14.09.2008 அன்று தருமபுரியில் வழங்கினார். அந்த உறையில் "என் மகன் இளங்கோவன் அவர்கட்கு" என்று எழுதி, ஒப்பமிட்டு வழங்கினார். அவரின் நினைவாகப் போற்றிப் பாதுகாக்கும் உறை இன்று என் கண்ணில் தென்பட்டது. பொறியாளர் அறவாழி, மருத்துவர் கூத்தரசன், பொறியாளர் தகடூர் கோபி மூவரும் இயற்கை எய்தினர். இந்த உறை மூவரையும் நினைவுகூர வைத்துவிட்டது.

கருத்துகள் இல்லை: